திருச்சி, நவ.6: வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தில் இயந்திர நடவு பாய் நாற்றங்கால் அமைத்தல் பயிற்சி பெற்றனர்.லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே எம்.ஆர் பாளையம் நாளந்தா வேளாண் கல்லூரியில் இளம் அறிவியல் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் 90 நாட்கள் கிராமங்களில் தங்கி, விவசாயிகளுடன் ஓன்றிணைந்து வேளாண்மை குறித்த அனுபவங்களையும், தகவல்களையும் திரட்டி பயிற்சி பெற்று வருகின்றனர். திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட கிராமங்களான புள்ளம்பாடி, மால்வாய், கீழரசூர், கல்லகம், மேலரசூர், இடங்கிமங்கலம், நஞ்சை சங்கேந்தி, வௌ்ளனூர், கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் அனுபவத்தை கேட்டும், நேரிடையாக பார்த்தும் பயிற்சி பெற்றனர். வெள்ளனூரில் விவசாயிகளுடன் இணைந்து மரக்கன்றுகள் நடுதல், நம்புகுறிச்சியில் மானாவாரி விவசாயிகளுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி மற்றும் பனை விதைகளை விநியோகம் செய்து நடவு செய்தல், ஆலம்பாக்கத்தில் பிரதமரின் ஓய்வூதிய திட்ட விழிப்புணர்வு முகாம் போன்ற பயிற்சிகளை பெற்றனர். ராமநாதபுரம் கிராமத்தில் இயந்திரநடவு பாய்நாற்றங்கால், மால்வாய் கிராமத்தில் மக்காச்சோள படைப்புழு மேலாண்மை, கல்லகம் கிராமத்தில் வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் போன்ற செயல்விளக்கங்களை செய்து அனுபவம் பெற்றனர். மாணவிகளுக்கு புள்ளம்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மோகன், வேளாண் அலுவலர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.