×

மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலுக்கான மருந்து தெளிப்பு செயல்விளக்கம்

பெரம்பலூர், நவ. 6: பெரம்பலூர் அருகே அரணாரை கிராமத்தில் ஒட்டுமொத்த பரப்பில் மக்காச்சோளம் படைப்புழு தாக்குதலுக்கான மருந்து தெளிப்பு செயல்விளக்கம் நேற்று நடந்தது.பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் மற்றும் குன்னம் ஆகிய தாலுகாக்களில் உள்ள 152 வருவாய் கிராமங்களில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் அதிகளவில் இந்தாண்டும் விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு ஆரம்பம் முதலே மக்காச்சோளத்தில் படைப்பழு தாக்குதலை கட்டுப்படுத்த கடந்த 3 மாதங்களாக வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு பல்வேறு வகைகளில் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இதன்படி பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோள வயல்களுக்கு மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கணேசன் தலைமையில், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் ராஜசேகர் முன்னிலையில் வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) பிரேமாவதி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கதிரவன் ஆகியோர் நேரில் சென்று படைப்புழு தாக்குதலுக்கான மருந்து தெளிப்பு பணிகளுக்கான செயல்விளக்கங்களை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர்.

இந்த மருந்து தெளிப்பு செயல்விளக்கத்தின் போது விவசாயிகளுக்கு இலவசமாக மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலுக்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மருந்து தெளிப்பு செலவினமாக ஹெக்டேருக்கு 500 ரூபாய் வழங்கப்படவுள்ளது. மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.334 கட்டணம் செலுத்தி இசேவை மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் எடுத்து கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரணாரை கிராமத்தை சேர்ந்த மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பலர் பங்கேற்று செயல்விளக்கங்களை பார்த்து தெரிந்து கொண்டனர்.

Tags : pesticide attack ,
× RELATED பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி...