கரூர், நவ. 6: கரூர் திண்ணப்பா கார்னர் அருகேயுள்ள ராமகிருஷ்ணபுரம் பிரிவுச் சாலையின் அருகே நிலவும் போக்குவரத்து நெருக்கடி சீரமைக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.கரூரில் இருந்து வேலூர், வாங்கல், நெரூர், சோமூர், திருமுக்கூடலுர், புலியூர், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அனைத்து வாகனங்களும் திண்ணப்பா கார்னர் வழியாக வடக்கு பிரதட்சணம் சாலையின் வழியாக சென்று வருகிறது.திண்ணப்பா கார்னர் பகுதியை தாண்டியதும் ராமகிருஷ்ணபுரம் பகுதிக்கு செல்வதற்கான சாலை உள்ளது. டெக்ஸ்டைல்ஸ் நிறைந்த பகுதி என்பதால் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.
கரூர் ஜவஹர் பஜார், கோபாலபுரம், ஈஸ்வரன் கோயில் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் வடக்கு பிரதட்சணம் சாலையை கடந்து சென்று வருகின்றன. இதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.எனவே, போக்குவரத்தினை சமாளிக்கும் வகையில் குறிப்பிட்ட சந்திப்பு பகுதியில் பேரிகார்டு போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.