கரூர், நவ. 6: கரூர் நகராட்சிக்குட்பட்ட டாஸ்மாக் செயல்படும் கடைகளின் அருகில் குடிமகன்களை குறி வைத்து ஏராளமான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இதுபோல செயல்படும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமற்றதாக உள்ளதோடு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தரமற்ற பொருட்கள், கூடுதல் விலை போன்ற லாபத்தை மட்டுமே குறி வைத்து செயல்படும் கடைகளில் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் யாரும் இதுநாள் வரை எந்தவிதமான ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
குடிபோதையில் தரமற்ற பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்வது வாடிக்கையாக நடைபெற்று வருவதால் இதையே காரணமாக வைத்து ஏராளமான உணவகங்கள் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளின் அருகிலேயே செயல்படுகின்றன. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனம் காப்பதால் நாளுக்கு நாள் இதுபோன்றவர்களின் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது இதுபோன்ற உணவகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.