பொங்கலூர், நவ.6: மயானம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ,வே.வடமலைபாளைய ஊராட்சியிலுள்ள கெரடமுத்தூர் கிராம பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வே.வடமலைபாளையம் ஊராட்சியில் உள்ள கெரடமுத்தூர் கிராமத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பலவருடங்களாக அப்பகுதியில் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம், மயான வசதிகள் செய்துதரப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு மனுக்கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மண்டல வட்டார துணை அலுவலர் வெண்ணிலா மற்றும் அவினாசிபாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் கோரிக்கைகளை பரிசீலித்து பிரச்னைக்கு தீர்வுகாணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.