மதுராந்தகம், நவ. 6: மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு அருகே உள்ள கடமலைபுத்தூரில் இருந்து ஒரத்தி வரையிலான சுமார் 10 கிமீ சாலையில், சமீபத்தில் ஆங்காங்கே 20க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள் கட்டும் பணி நடந்து முடிந்தது. இந்த பாலங்களின் இருபுறத்திலும் சாலைகள் இணைப்பு பணி முறையாக செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், பாலத்தின் இரு புறங்களிலும் சாலையில் விரிசல் ஏற்பட்டு, வெடிப்பு காணப்படுகிறது. இதனால், ஒவ்வொரு பாலம் அமைந்துள்ள பகுதிகளிலும் அந்த பாலத்தின் இரு புறங்களிலும் பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர்.பாலம் கட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தினர், அந்த பணி முடிந்ததும் இணைப்பு சாலையை சரிவர அமைக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மேலும் மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும், வாகன ஓட்டிகள் இதில் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பாலங்களின் இருபுறங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து சீரான, சமமான முறையில் இணைப்பு சாலைகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.