பள்ளிப்பட்டு, நவ. 6: அம்மையார்குப்பத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் ஊராட்சி பாரதிதாசன் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக சீராக குடிநீர் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அப்பகுதியினர் சாலை மறியல் உள்பட பல்வேறு வித போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக அப்பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், ஆழ்துளை கிணறு அமைத்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் மின்மோட்டார் பொருத்தி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இதனால் விரக்தி அடைந்த அப்பகுதியினர் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு கூடினர். சாலையில் அமர்ந்து திடீர் என மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்ததும் ஆர்.கே.பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.