சென்னை: வங்கி நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு கோவை சென்ற வேளச்சேரியை சேர்ந்தவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். வேளச்சேரியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சுவாமிநாதன் (39). இவர், சென்னையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் ஆட்கள் தேர்வு செய்ய நேற்று முன்தினம் நேர்முக தேர்வு நடைபெறுவதாக சுவாமிநாதனுக்கு தெரியவந்தது. இதில், பங்கேற்பதற்காக ரயிலில் கோவை வந்தார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்தார். ஆர்.எஸ்.புரம் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த சுவாமிநாதனுக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.