தர்மபுரி, நவ.5: கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் நேற்று பக்தர்கள் நேற்று மனு கொடுத்தனர்.தர்மபுரி மாவட்ட கோயில் பக்தர்கள் சார்பில், நேற்று கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 100க்கணக்கான பழமையான கோயில்கள் உள்ளன. கோயில் நிலங்கள் கோயில்களின் பராமரிப்பு மற்றும் பூஜைக்காக முன்னோர்களால் தானமாக கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் கோயிலுக்கு சொந்தமானதே தவிர, அரசுக்கு சொந்தமானது அல்ல. இந்நிலையில் தமிழக அரசு கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் அரசாணை பிறப்பித்துள்ளது. அரசு கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கும் விற்பதற்கும், இலவசமாக வழங்குவதற்கும் எடுத்துள்ள முடிவு பக்தர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது. எனவே அரசு இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.