×

வாலிபரை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

தர்மபுரி, நவ.5: தர்மபுரி அருகே வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உறவினர்கள் மனு கொடுத்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த வேடியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் அரூர் அருகே போடிநாயக்கன்பட்டியில் சுமார் 70 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த மாதம் 26ம் தேதி எனது மகன் ஸ்ரீதர்(20) பெத்தூரில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு, இரவு 7 மணி அளவில் பெத்தூருக்கும், போடிநாயக்கன்பட்டிக்கும் இடையே உள்ள சாலையோரம் இயற்கை உபாதையை கழித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் அங்கு வந்தது.

மேலும், எனது மகனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் 27ம் தேதியும் எஙகள் ஊரை சேர்ந்த சிலரை ஏற்கனவே தாக்கியவர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக மொரப்பூர் காவல் நிலையத்தில் நாங்கள் புகார் செய்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் எங்கள் கிராமத்திற்கே வந்து, எங்கள் கிராம மக்களை தூங்க விடாமல் துன்புறுத்துகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு, எனது மகன் மற்றும் ஊர்க்காரர்களை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : plaintiff ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...