×

நிதியுதவி வழங்கும் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் சேர்ப்பு

திருச்செங்கோடு, நவ.5: திருச்செங்கோடு வட்டாரத்தில் நிதியுதவி வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் சேர்க்கை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருச்செங்கோடு வட்டாரத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் பிரதம மந்திரி சம்மன் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி கிடைக்காத மற்றும் சேர விருப்பமுள்ள விடுபட்ட விவசாயிகளை சேர்க்கும் முகாம் அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடத்தப்படவுள்ளது. அதன்படி, இன்று 5 ந் தேதி திருச்செங்கோடு, சின்னத்தம்பிபாளையம், தோ.கவுண்டம்பாளையம், சிக்கநாய்க்கன்பாளையம், சிறுமொளசி ஆகிய கிராமங்களிலும், நாளை 6ம் தேதியன்று மோடமங்கலம், வட்டூர், தோக்கவாடி, மொளசி உள்ளிட்ட கிராமங்களிலும் இம்முகாம் நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி (வியாழக்கிழமை) தேவனாங்குறிச்சி, ஓ.ராஜாபாளையம், எஸ்.இறையமங்கலம், சித்தாளந்தூர் ஆகிய கிராமங்களிலும் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள விவசாயிகள் அனைவரும் சிட்டா, ஆதார் அட்டை, வங்கி கணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் முகாமிற்கு வர வேண்டும். முகாமிற்கு வர தவறிய விவசாயிகள், திருச்செங்கோடு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தேவையான ஆவணங்களை கொடுக்கலாம் என திருச்செங்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமணி  தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் மீட்பு