பண்ருட்டி, நவ. 5: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசினர் மேனிலைப்பள்ளியில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 10ம் வகுப்பிற்கென தனி வகுப்பறை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கதவுகள் கடந்த சில மாதங்களாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கதவு சரி செய்யப்பட்டது. ஆனால் பூட்டு போடாமல் இருந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று வகுப்பில் உள்ள மாணவிகள் வகுப்பு பாடங்களை படித்துவிட்டு தங்களது ஒருசில நோட்டு புத்தகங்களை தாங்கள் அமரும் டெஸ்கில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று பள்ளி வந்த மாணவிகள் வகுப்பறை வந்ததும் தங்களது புத்தகம், நோட்டுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அங்கு ஏராளமான நோட்டு புத்தகங்கள் கிழித்து போடப்பட்டிருந்தன. மேலும் புகையிலை பொருட்களும் கிடந்தன. வகுப்பறை கரும்பலகையில் காதல் சம்பந்தமான வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர் உடனடியாக வகுப்பறையை பார்வையிட்டு நடந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவித்தார். பின்னர் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டபோது 2க்கும் மேற்பட்டவர்கள் விடுமுறை நாளன்று பள்ளியின் உள்ளே வந்தது தெரிந்தது. இருப்பினும் பெண்கள் பயிலும் வகுப்பறையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். பள்ளியின் அனைத்து கேட்டுகளும் மூடப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டனர் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.