×

தோகைமலையில் துணிகரம் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

தோகைமலை, நவ. 5:  கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள வேதாசலபுரத்தில் வசிப்பவர் காமராஜ் மனைவி சாரதா(40). பொறிகடலை வியாபாரம் செய்து வருகிறார். சாரதாவின் மகளும், மகனும் வெளியூரில் உள்ளதால் தனது கணவர் காமராஜ் மறைவுக்கு பிறகு தனிமையில் வசித்து வந்துள்ளார். தினந்தோறும் இரவில் அருகில் உள்ள உறவினர் வீட்டில் சாரதா தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கி உள்ளார். பின்னர் நேற்று காலை தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டி இருந்த கதவு திறந்து இருப்பதை கண்டு சாரதா அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்து உள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் திறந்து கிடந்துள்ளது. அதில் வைத்திருந்த 6 பவுன் தங்க செயின், 6 கிராம் தங்க மோதிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கமும் மாயமாகி இருந்ததை கண்டு சாரதா மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தோகைமலை காவல்நிலையத்தில் சாராதா புகார் அளித்தார். அதன்பேரில் தோகைமலை போலீசார் மற்றும் கரூர் கைரேகை நிபுணர்கள் வந்து சாரதா வீட்டில் ஆய்வு செய்து நகை, ரொக்கப்பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு