மானாமதுரை, நவ.5: மானாமதுரை செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவர் தனது வீட்டில் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இவரது வீட்டில் உள்ள ஒரு பசு மாடு முதலில் காளை கன்று ஈன்றது. நஞ்சுக்கொடி விழாமல் இருந்ததால் மீண்டும் ஒரு பசு கன்றை ஈன்றது. வழக்கமாக பசு மாடுகள் அனைத்தும் ஒரு பிரசவத்தில் ஒரே ஒரு கன்றுதான் ஈனும். ஆனால் சித்ரா வளர்த்த பசுமாடு இரண்டு கன்று ஈன்றுள்ளது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாட்டின் உரிமையாளர் சித்ரா கூறுகையில், நான் தனலெட்சுமி என்ற பசுமாட்டை எட்டு ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். இதற்கு முன் நான்கு பிரசவத்தின் போதும் ஒரே ஒரு கன்று ஈன்றது. இந்த முறை ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்றுள்ளது என்றார்.