×

இணையதள பிரச்னையால் வங்கி பணிகள் முடக்கம்

சாயல்குடி, நவ.5: கடலாடி தாலுகாவில் உள்ள அரசு அலுவலகங்கள், வங்கிகளில், இப்பகுதி  பொதுமக்கள் சான்றுகள் மற்றும் சலுகைகள், சேவைகள் பெற்று வருகின்றனர். அனைத்து அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனமாக பி.எஸ்.என்.எல் இணைப்பை பெற்றுள்ளனர். இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் பிரச்னையால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர். மேலும் தாலுகா அலுவலகம், யூனியன், சார்பதிவாளர் அலுவலகம், சார்நிலை கருவூலம், மின்சார வாரியம் மற்றும் அஞ்சல் அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த நிறுவனங்களிலும் பி.எஸ்.என்.எல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. முதுகுளத்தூரை மையமாக வைத்து கடலாடி பகுதிகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இங்கு அடிக்கடி ஏற்படும் சில தடைகளால் பி.எஸ்.என்.எல் இணைப்பு துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. தற்போது தொடர்மழை பெய்து வருவதால், வெளியே கிடக்கும் தொலை தொடர்பு வயர்கள் அறுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நெட் ஒர்க் பிரச்னை ஏற்பட்டு இணையதள இணைப்பின்றி கணிப்பொறிகளை இயக்க முடியாமல், பொதுமக்களுக்கு தேவையானவற்றை வழங்க முடியாமல் அலுவலர்கள், நெட் வேலை செய்யவில்லை எனக் கூறி, அனுப்பி விடுகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு வேலை விண்ணப்பதாரர்கள், விவசாயிகள் பட்டா போன்ற சான்றுகளை அரசு அலுவலகங்களில்  பெற முடியாமல் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை