×

ஷார்ஜாவில் கொத்தடிமை வேலை மகனை மீட்டு தர கோரி பெற்றோர் கதறல்

திண்டுக்கல், நவ. 5: ஷார்ஜாவில் உரிய சம்பளமின்றி கொத்தடிமையாக வேலை பார்க்கும் மகனை மீட்டுத்தர கோரி பெற்றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர். பழநி அருகே முத்துநாயக்கன்பட்டி மிடாப்பாடி பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் அரவிந்த். இவர் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ஜான் என்ற ஏஜென்ட் மூலம் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஷார்ஜாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் அரவிந்த் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அங்கு அவருக்கு சரியாக சம்பளம் வழங்காமல் தொடர்ந்து வேலை வாங்குவதோடு கொத்தடிமை போல நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரவிந்த் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இதனால் பதறிபோன தந்தை நாகராஜ் தனது மனைவியுடன் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தார். அந்த மனுவில், ‘ஏற்கனவே மகனை மீட்டு தரக்கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுத்து எங்களது மகனை மீட்டுத்தர வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Tags : Parents ,Sharjah ,
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!