வத்தலக்குண்டு, நவ. 5: நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் 20க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு, ஏலம் விட்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்கடைகள் வைத்திருப்பவர்கள் சிலர் விதிகளை மீறி சுமார் 10 அடி நீளம் முன்புறம் ஆக்கிரமிப்பு செய்தும், சிலர் உள்வாடகைக்கு விட்டும், சிலர் கட்டிடங்கள் கட்டி வாடகைக்கும் விட்டிருந்தனர். இதை அகற்ற பேரூராட்சி செயல்அலுவலர் கோட்டைச்சாமி உத்தரவின்படி கடந்த நவ. 1ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்கள் 2 நாட்கள் கால அவகாசம் கேட்டனர். இதை ஏற்று தாசில்தார் யூஜீன் நவ.4ம் தேதி வரை அவகாசம் கொடுத்தார். அதன்படி சிலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். எனினும் 40க்கும் மேற்பட்ட கடைகாரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதை அகற்ற நிலக்கோட்டை துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு பாலகுமார் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள், போலீசார் நேற்று ஜேசிபி இயந்திரத்துடன் வந்தனர். தொடர்ந்து ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. அப்போது நிலக்கோட்டை பஸ்நிலையத்தில் செந்தில்கனியன் என்ற வழக்கறிஞர் ஒரு கட்டிடத்தில் தனது அலுவலகத்தை நடத்தி வந்தார். இதை அகற்ற சென்ற போது செந்தில் கனியன் உள்பட 5 வழக்கறிஞர்கள் இடிக்க கூடாது எனக்கூறி கட்டிடத்திற்குள் அமர்ந்து சுமார் 2 மணிநேரம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கையை அதிகாரிகளுடன் பேசி நிறைவேற்றப்படும், எனவே அரசு பணியை தடுக்க வேண்டாம் என கேட்டு கொண்டனர். இதை ஏற்று கொண்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.