பொங்கலூர், நவ.5;பல்லடம் தாலூகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் செயற்குழு கூட்டம் கள்ளிப்பாளையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இயக்கத் தலைவர் மணிக்குமார் தலைமை வகித்தார், பொருளாளர் நாகராஜன் வரவேற்றார், கூட்டத்தில் மின்சாரம், எரிவாயு, ரேசன் கடை நுகர்வோர்கள் பிரச்னை, குறைபாடுகளுக்கு உடனே தீர்வு காண எடுக்கவேண்டிய நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் வருவாய்துறை அலுவலகங்களில் உரிய நடவடிக்கை இல்லாமல் தேங்கி உள்ள பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சமுக பாதுகாப்பு திட்ட அலுவலகங்களில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி கோரிய பயனாளிகளின் மனுக்களுக்கு உரிய தீர்வும் பதிலும் அளிக்காமல் பலமாதங்களாக காத்திருப்பில் உள்ளது. ஊழியர்கள் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக புகார்கள் எழுவதன் பேரில் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் திருப்பூர் கலெக்டருக்கு கடிதம் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி சுனிதா கிட்டுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.