கோவை, நவ.5: டெல்லியில் வக்கீல்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கோவையில் 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். டெல்லியில் உள்ள ஹசாலி நீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதி வளாகத்தில் இருந்த வக்கீல்களை அங்கு பணியில் இருந்த போலீசார் தாக்கினர். வக்கீல்களை தாக்கிய போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தமிழகம் முழுவதும் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் தெரிவித்திருந்தார். அதன்படி கோவையில் சுமார் 3 ஆயிரம் வக்கீல்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பாதிப்படைந்தது.
இந்த நிலையில் டெல்லியில் வக்கீல்களை தாக்கிய போலீசாரைக் கண்டித்து கோவையில் வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுதீஷ், ஜேக் தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டெல்லி திஸ் ஹசாலி நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த வக்கீல்களை தாக்கிய டெல்லி போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.