கீழ்வேளூர், நவ.5: நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிஆர்ஓ இந்துமதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்று திறனாளிகளிடம் இருந்து வங்கி கடன் மற்றும் உதவித் தொகை கேட்டு 28 மனுக்களும், பொதுமக்களிடம் இருந்து 305 மனுக்கள் உள்ளிட்ட 333 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சுனாமி குடியிருப்பு எம்ஜிஆர் வீதியை சேர்ந்த ரமாதேவி கடந்த 2004ம் ஆண்டு உயிரிழந்ததையொட்டி வாரிசுதாரர்களின் பெயரில் பாரத பிரதமரின் குழந்தை உதவித் திட்டத்தின் கீழ் வைப்பு தொகையாக தலா ரூ.51 ஆயிரம் இரண்டு குழந்தைகளுக்கும், 2 மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளுக்கு தலா ரூ.45 ஆயிரம் மதிப்புடைய கையடக்க கணிணிகளும், சுயத் தொழில் செய்பவர்களுக்கு வங்கி கடன் மானியமாக 12 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரத்தையும் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி வழங்கினார். கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் ராஜன் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.