×

கோவில்பதாகை சாலையில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்

ஆவடி, நவ.5: ஆவடி மாநகராட்சி கோவில்பதாகை சாலையில் தனியார் கல்லூரி, பள்ளிக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இச்சாலையை பயன்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இச்சாலை ஓரத்தில் கோவில்பதாகை, கன்னடபாளையம் ஆகிய பகுதிகளில் குப்பைகள் பல நாட்களாக அள்ளாமலேயே குவிந்து கிடந்தன. இந்த குப்பைகள் மழையில் நனைந்து மக்கி கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும், குப்பைகள் காற்றில் பறந்து இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்கள, கடைகள், வீடுகளுக்குள் விழுந்தன.

இதுகுறித்து நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, ஆவடி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், மேற்கண்ட இரண்டு இடங்களிலும்  குவிந்துகிடந்த குப்பைகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், அந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இதோடு மட்டுமல்லாமல், கோவில்பதாகை நெடுஞ்சாலையில் குப்பைகள் தேங்காமல் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டையும், நன்றியும் தெரிவித்தனர்.


Tags : temple road ,
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை