×

ஆவடி தாலுகாவில் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்

ஆவடி, நவ.5:  ஆவடி தாலுகாவில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கண்காணிப்பு அலுவலர் பி.முருகேஷ் தலைமை தாங்கினார். ஆவடி தாசில்தார் சரவணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளவும், பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்கவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆவடி தாலுகாவில் 2 இடங்கள் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகவும், 7 இடங்கள் அதிக பாதிப்பு பகுதிகளாகவும், ஒரு இடம் மிதமான பாதிப்புக்கு உள்ளாக கூடியதாகவும் மற்றும் 3 இடங்கள் குறைவான பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 13 இடங்களில் துணை ஆட்சியர் நிலையில் தலைமை அலுவலராக கொண்டு வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை, மின்சாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை போன்ற பலதுறை அலுவலர்களை கொண்ட 13 மண்டல குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த குழுவில் 127 பெண் மற்றும் 173ஆண் என 300 முதல் நிலை தகவல் தன்னார்வலர்கள் பணிபுரிய உள்ளனர். அது மட்டுமில்லாமல், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மாவட்டத்தின் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணித்து வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 23 தற்காலிக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பருத்திபட்டு ஏரி, திருநின்றவூர் ஏரி ஆகிய நீர்நிலைகளின் கொள்ளளவு முழு அளவு எட்டி விடுவதை பொதுப்பணித்துறை அலுவலகம் மூலம் அவ்வப்போது கண்காணித்து உபரி நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல், 4300 மணல் முட்டைகள்,  3000 கிலோ பிளீச்சிங் பவுடர், மரம் அறுக்கும் இயந்திரங்கள், பொக்லைன், ஜெனரேட்டர் அத்தியாவசிய மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 24மணி நேரம் இயங்கக்கூடிய வெள்ள கட்டுப்பாட்டு அறையில் 044- 26554313 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவிக்கும் எச்சரிக்கை தேவைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆவடி தாலுகாவில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்கள் தங்களது செல்போனை எப்பொழுதும் தயாராக வைத்திருக்கவேண்டும் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவரின் முன் அனுமதியின்றி விடுப்போ, தலைமை இடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நியாயவிலை கடைகள், மருத்துவமனைகளில் அத்தியாவசிய பொருட்களும் மருந்துகளும், போதிய அளவு இருப்பு வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர்கள் சங்கர், ஜெயசீலன், துணை தாசில்தார்கள் செந்தில்குமார், மகேஷ், தீயணைப்பு காவல்துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : review meeting ,Awadi Taluk ,
× RELATED தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு...