மாமல்லபுரம், நவ.5: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் அவதார திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.108 திவ்ய தேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் அவதார திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, 9ம் நாள் திருவிழாவான நேற்று தலசயன பெருமாள், பூதத்தாழ்வார் உற்சவரின் தேரோட்டம் நடந்தது.முன்னதாக நான்கு மாடவீதிகள் வழியாக தேர் சென்றபோது, அங்கு கூடியிருந்த 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஏராளமானோர் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து தரிசனம் செய்து வழிபட்டனர்.அப்போது பக்தர்களுக்கு வழி நெடுகிளும் நீர் மோர், அன்னதானம், குளிர்பானம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இதில் சுமார் 4 மணி நேரத்துக்கு பின், தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போனில் படம்பிடித்து மகிழ்ச்சியடைந்தனர்.