×

மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மினிபஸ் இணைப்பு சேவை நிறுத்தம்

சென்னை: பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சீருந்து இணைப்பு சேவை நேற்று முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. ரயில் பயணிகளின் வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவையை நிர்வாகம் தொடங்கியது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, ஏஜி.டிஎம்எஸ் மற்றும் நந்தனம் ஆகிய 6 மெட்ரோ நிலையங்களில் புதிதாக சீருந்து இணைப்பு சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியது. தற்போது 10க்கும் மேற்பட்ட நிலையங்களில் இந்த சேவை செயல்பட்டு வருகிறது. இந்த இணைப்பு சேவை ரூ.10 கட்டணத்துடன் ஒவ்வொரு ரயில் நிலையத்தில் இருந்தும் 6 முதல் 8 கி.மீ தூரம் வரையில் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இயக்கப்படும் இச்சேவையை நாள் ஒன்றுக்கு 10 பேர் கூட பயன்படுத்துவதில்லை எனவும் தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது. எனவே, சீருந்து இணைப்பு சேவையை மேம்படுத்த வேண்டும் என அந்தந்த நிலைய கட்டுப்பாட்டாளர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டது.  இருந்தும் இச்சேவைக்கு சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் போதிய வரவேற்பு இல்லாமலேயே இருந்தது. தொடர்ந்து பயணிகள் இல்லாமல் வாகனம் இயக்கப்பட்டு வந்ததால் தொடர் நஷ்டமும் ஏற்பட்டது. எனவே, நேற்று முதல் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் சீருந்து இணைப்பு சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இயக்கப்பட்டு வந்த 2 வாகனத்தில் ஒன்றை அரசினர் தோட்டம் நிலையத்திற்கும், விமான நிலையத்திற்கும் நிர்வாகம் அனுப்பியுள்ளது. சீருந்து இணைப்பு சேவை தொடங்கி 2 மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில் போதிய வரவேற்பு இல்லாமல் சென்ட்ரலில் இச்சேவை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


Tags : Central Metro station ,reception ,
× RELATED பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா அரசு...