×

தாம்பரத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு சினிமா தியேட்டரில் தரமற்ற உணவு பொருட்கள் அழிப்பு

தாம்பரம்: தாம்பரத்தில் உள்ள திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, தரமற்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அழித்தனர்.மேற்கு தாம்பரம் கக்கன் தெருவில் வித்யா திரையரங்கம் உள்ளது. இங்கு காலை முதல் இரவு வரை என ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் திரையிடப்படுகின்றன. இந்த திரையரங்கிற்கு தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து படம் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த திரையரங்கில் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால், அதை வாங்கி சாப்பிடும் பொதுமக்களுக்கு வாந்தி, தலை சுத்தல், மயக்கம் மற்றும் வயிற்று உபாதை ஏற்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் அனுராதாவிடம் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.அவரது உத்தரவின் பேரில், தாம்பரம் மற்றும் பல்லாவரம் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விமலேஸ்வரன், ஜான் சிம்சன் மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் அந்த திரையரங்கில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திரையரங்கில் தயாரிப்பு தேதி, தயாரிப்பு முகவரி மற்றும் காலாவதி இல்லாத குளிர்பானங்கள், பாப்கான் மூலப்பொருள், பாப்கான் மசாலா பவுடர், பொட்டேட்டோ பால்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், உணவு பாதுகாப்பு சம்மந்தமான சான்றிதழையும், திரையரங்கு ஊழியர்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுக்கவில்லை. இதனையடுத்து, அங்கு இருந்த 8 லிட்டர் குளிர்பானங்கள், கெட்டுப்போன பப்ஸ்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கீழே கொட்டி அழித்தனர். மேலும், அங்கு தயாரிப்பு தேதி உள்ளிட்டவை இல்லாமல் இருந்த 275 கிலோ பாப்கான் மூலப்பொருட்களின் 11 மூட்டைகளை சணல் கயிறால் கட்டி திறக்க முடியாத அளவிற்கு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். மேலும், இதுபோல் தொடர்ந்து தரமற்ற உணவு பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




Tags : movie theater ,
× RELATED பிரத்யேக காட்சி கோரி சினிமா தியேட்டர் சூறை: சிறுவன் உட்பட 3 பேர் கைது