×

தொடர் மழையால் குண்டும், குழியுமாக மாறிய நாசரேத் - குரும்பூர் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நாசரேத், நவ. 5: நாசரேத் - குரும்பூர் இடையிலான சாலையை நாசரேத், பிரகாசபுரம், மூக்குப்பீறி, இடையன்விளை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக இச்சாலை, பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இவ்வழியாக தினமும் ஏராளமான பஸ்கள், லாரிகள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சைக்கிள்களிலும், இருசக்கர வாகனங்களிலும் செல்கின்றனர். தற்போது சாலை பழுதடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து நாசரேத் டவர் அரிமா சங்க தலைவர் அருள்மணி கூறியதாவது: நாசரேத் - குரும்பூர் சாலை, குண்டும் குழியுமாக மாறியதால் சிறுசிறு விபத்துகள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளும் படாதபாடுபடுகின்றனர். எனவே இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும், என்றார்.

Tags : road ,Nazareth - Kurumbur ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...