தூத்துக்குடி, நவ. 5: கோயில்களின் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என்று இந்துமுன்னணி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பழமையான இந்துமத ஆலயங்கள் அதிகளவில் உள்ளன. இந்த ஆலயங்களின் பூஜை, பராமரிப்பு போன்ற தேவைகளை ஈடுசெய்யும் வகையில் முன்னோர்களால் கோயில்களுக்கு சொத்துகள் அதிகளவில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலங்கள் தனிநபர்களுக்கு குத்தகை, வாடகை என்ற பெயரில் கொடுக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் பெரும்பாலான நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழக அரசானது ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்பனை செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது, பக்தர்களை மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே தமிழக அரசு, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.