திருச்செங்கோடு, நவ.1: ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால், 9ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருச்செங்கோடு உண்டிக்கரடு தைலாம்பிகை நகரைச் சேர்ந்தவர் ராணி (40). இவரது கணவர் பிரகாஷ். இவர்களுக்கு 15 வயதில் சங்கீதா என்ற மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். சங்கீதா அருகில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த ராணி, மகன், மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், சங்கீதா பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து ராணி கேட்ட போது, சங்கீதா தனக்கு பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை எனவும், வேலைக்கு செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சங்கீதாவை கண்டித்து விட்டு ராணி வெளியில் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் வீட்டின் கதவை தாழிட்டுக் கொண்ட சங்கீதா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாகியும் கதவு பூட்டியிருந்ததால், ஜன்னல் வழியே ராணி எட்டி பார்த்த போது, சங்கீதா தூக்கில் சடலமாக தொங்குவது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராணி, திருச்செங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.