×

பெரியார் பல்கலை பணியாளர்கள் நள்ளிரவில் உள்ளிருப்பு போராட்டம்

ஓமலூர், நவ.1:  சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 4பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ஊழியர்கள் 2வது நாளாக நள்ளிரவிலும்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் மற்றும் நிர்வாக பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதியத்தை நாட்கணக்கில் கணக்கிடாமல் மாதக்கணக்கில் கணக்கிட்டு வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் தினக்கூலி பணியாளர்களை தொகுப்பூதிய பணியாளர்களாக பணிநிலை உயர்த்த வேண்டும். பணி நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்கள் குறித்து பேட்டியளித்த நிர்வாக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் சக்திவேல், கனிவண்ணன், செந்தில்குமார், கிருஷ்ணவேணி ஆகிய 4பேரை பல்கலைக்கழக (பொ)பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து திரும்ப பெற வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பெண் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் 2ம் நாளாக இரவிலும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில், எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், வருகைப்பதிவு செய்து விட்டு பணி செய்யாமல் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. வரும் 4ம் தேதிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அனைவரும், முன்னறிவிப்பு இல்லாமல் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.





Tags : Periyar University ,
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...