வாழப்பாடி.நவ.1: வாழப்பாடி பேரூராட்சியில் மின்சார கேபிள் பதிக்க தோண்டிய சாலையை, ஒரு வாரத்திற்குள் புதுப்பிக்காவிட்டால் மக்களை திரட்டி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கள்ளக்குறிச்சி எம்பி தெரிவித்தார்.வாழப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் பாதித்த நோயாளிகளை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா மற்றும் கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணி ஆகியோர் நேரில் சந்தித்து, சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே திமுக நகர செயலாளர் செல்வம் தலைமையில், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை எம்பி தொடங்கி வைத்த அவர், டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.வாழப்பாடி பேரூராட்சியில் காளியம்மன் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு, புதை வழித்தட மின்கேபிள் பதிக்க பள்ளம் தோண்டியவர்கள், பணிகள் முடிந்ததும் பள்ளத்தை முறையாக மூடவில்லை. தற்போது சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால் முதியவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியை ஆய்வு செய்த எம்பி கவுதம சிகாமணி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தார். பின்னர், மின்சார கேபிள் பதிக்க தோண்டிய சாலையை, ஒருவாரத்துக்குள் புதுப்பிக்கவில்லை எனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிகழ்ச்சியில் வாழப்பாடி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் செந்தில் முருகமணி, கலைச்செல்வி மாது, நிர்வாகிகள் ராஜவேல், வீரமணி, வக்கீல் பாலாஜி, உமாபதி, செந்தில்குமார், ஜெயவேல், கலைச்செல்வன், வக்கீல் வேணுகோபால், முன்னாள் கவுன்சிலர்கள் குமார், கமல்ராஜா, பெரியசாமி, செல்வம், மாணிக்கம், அப்துல்லா, ராஜேந்திரன், சுரேஷ், மணி, ரமேஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.