போடி, நவ.1: அறுவடை நேரத்தில் மழையால் உளுந்தம்பயறு நனைந்ததால் அவை கெட்டு விடாமல் இருக்க அவற்றை உலர்த்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.போடி சுற்றியுள்ள மேலசொக்கநாதபுரம், மீனாட்சிபுரம்,விசுவாசபுரம்,பத்ரகாளிபுரம், கரட்டுப்பட்டி, தருமத்துப்பட்டி உள்பட பல வேறு கிராமங்களில் கிணற்றுப்பாசனம் மூலம் உளுந்தம்பயறு பயிரிட்டிருந்தனர். ஒரு ஏக்கருக்கு உழவிலிருந்து துவங்கி களையெடுப்பு தொழிலாளர்கள் என அறுவடை வரையில் 15 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர். போடி பகுதியில் சில நூற்றுகணக்கான ஏக்கர்களில் உளுந்தம்பயறு விதைத்து கடும் சிரமத்திற்கிடையே அறுவடைக்கு தயாரானது.
இந்த நிலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து திடீரென பெய்த மழையால் உளுந்தம்பயறு அனைத்தும் நனைந்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனால் பயிர்களை அறுத்தெடுத்து வெயில் வரும் நேரங்களில் களத்தில் போட்டு உலர்த்தி வருகின்றனர். இதனால் பாதிப்பு ஏற்பட் டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து மேலசொக்கநாதபுரம் விவசாயி ஒருவர் கூறுகையில், 3 மாதத்தில் அறுவடைக்கு வரும் குறுகிய கால உளுந்து பயிர் விதைக்கப்பட்டது. கண்ணும் கருத்துமாக வளர்த்து அறுவடைக்கு நெருங் கிய நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் நனைந்து விட்டது. முதலுக்கு மோசம் வந்து விடக்கூடாது என அறுவடை செய்து சங்கரப்பன் கண்மாய் கரையில் வெயிலில் உலர்த்தி வருகிறோம் என்றார்.