மேலூர், நவ.1: மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மேலூர் அருகில் உள்ள அ.செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவி 2ம் இடம் பெற்று தேசிய போட்டிக்கு தேர்வாகி உள்ளார். தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் வேளாளர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. 11, 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 7 பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து 384 மாணவர்கள், 384 மாணவிகள் கலந்து கொண்டனர்.
பயிற்றுநர் மற்றும் மேலாளர்கள் என 64 பேர் இருந்தனர். இப்போட்டியில் மேலூர் அருகில் உள்ள அ.செட்டியார்பட்டி அரசு பள்ளியின் 5ம் வகுப்பு மாணவி சோலையம்மாள் கலந்து கொண்டார். இவர் 7 சுற்றுகளில் 6.5 புள்ளிகள் பெற்று மாநில அளவில் 2ம் இடம் பெற்று அசத்தினார். இதன் மூலம் இவர் தேசிய அளவிலான போட்டிக்கு நேரடியாக தேர்வு பெற்றுள்ளார்.வெற்றி பெற்று திரும்பிய மாணவி சோலையம்மாள் மற்றும் இவருக்கு ஓராண்டாக பயிற்சி அளித்த இடைநிலை ஆசிரியர் செந்தில்குமாரையும், செட்டியார்பட்டி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை, அ.வல்லாளபட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஆசிர்வாதம், மற்றும் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்தி வரவேற்றனர்.