உடுமலை, நவ.1: உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஐஸ்வர்யா நகர் செல்லும் சாலையின் துவக்கத்தில் பெரிய பள்ளம் உருவாகி இருந்தது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறையிடம் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்தன. தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மேலும் சிரமத்துக்கு ஆளாயினர். இந்நிலையில், வாகன ஓட்டிகள் சிரமப்படுவதை கண்ட உடுமலை சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ. ரவீந்திரன் இந்த பள்ளWத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம், பள்ளத்தில் சிமென்ட், ஜல்லி கலவை போட்டு நிரவி சமன் செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்றுவருகின்றனர். எஸ்.ஐ. ரவீந்திரனின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நகரில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள சாலை அரிப்பை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து பணி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.