திருப்பூர், நவ.1: பல கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தமிழக அரசை கண்டித்து வரும் 4ம் ேததி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்படுமென மாநில தலைவர் கூறினார். இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியன் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை ஆட்சி செய்த இந்து மன்னர்கள் கோயில்களுக்கு 6 லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களை தானமாக கொடுத்துள்ளனர். மேலும், சிறு, குறு ஜமீன்தார்கள் கோயில்களுக்கு தங்களுடைய நிலங்களை தானமாக எழுதிக்கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. கோயில் நிலங்களை 5 ஆண்டுக்கு மேலாக வைத்துள்ளவர்களுக்கு பட்டா கொடுக்க பரிந்துரைத்துள்ளது. இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான இடங்களை தனியார் பிடியிலிருந்து மீட்டு அரசு கையகப்படுத்த வேண்டும். இஸ்லாம், கிருத்துவம் ஆகிய கோயில்களின் வருமானத்தை முழுமையாக அவர்களின் மத வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.
ஆனால், இந்து கோயில் வருமானத்தை முழுமையாக அரசு எடுத்துக்கொண்டு மற்ற செலவுகளுக்கு பயன்படுத்துகிறது. இதை தவிர்க்க வேண்டும். பல கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தமிழக அரசின் அரசாணையை கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 4ம் ேததி மாவட்ட தலைநகரங்களில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்படும். கோயில் வருமானத்தை வெளியிட வேண்டும். அரசு கோயிலை விட்டு வெளியேற வேண்டும். கோயில் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால் இதன் தாக்கம் வரும் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் எதிரொலிக்கும். டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப்பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.