குன்னூர், நவ. 1:கன மழை காரணமாக, தீயணைப்பு துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரின் சீரமைப்பு பணிக்காக நேற்று குன்னூர் வந்தனர். நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்க மற்றும் விழக்கூடிய நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றவும் கோவை மாவட்டத்தில் இருந்து 60 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் குன்னூர் வந்தனர். இது குறித்து தீயணைப்பு அதிகாரி பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘குன்னூர் வந்துள்ள 60 தீயணைப்பு துறையினரும் பல குழுக்களாக பிரித்து செயல்படுவோம். தீயணைப்பு துறையினரின் 5 வாகனங்கள் மொபைல் வாகனங்களாக செயல்பட்டு வருகிறது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் இரண்டு வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வழியில் விழக்கூடிய மரங்கள் மற்றும் மண் சரிவுகளை உடனடியாக அகற்றினர். மேட்டுப்பாளையம் கடந்து வரும்போது மூன்று இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. அவற்றை வெட்டி அகற்றிய பின்னர் குன்னூர் வந்து சேர்ந்தோம். மேலும் சென்னையில் இருந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் குன்னூர் வந்துள்ளனர். தொடர்ந்து பர்லியார், காட்டேரி, உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி ஈடுபடுகின்றனர்.இவ்வாறு அவர்
கூறினார்.