×

வேளாங்கண்ணியில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்க விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்

நாகை, நவ.1: வேளாங்கண்ணியில் இருந்து தென்மாவட்டங்களை இணைக்க விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர்கள் நல சங்க கூட்டம் நாகூரில் நடந்தது.
ராஜமாணிக்கம் அமைப்பாளராக செயல்பட்டு பொறுப்பாளர்களை தேர்வு செய்தார். இதில் தலைவராக முகம்மதுதாஹா, செயலாளராக சித்திக், பொருளாளராக மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், அதிகாலையில் விரைவு ரயில் காரைக்கால் அல்லது நாகூரில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு செல்ல வேண்டும். மறு மார்க்கத்தில் மாலை திருச்சியில் இருந்து நாகூர் அல்லது காரைக்காலுக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும். வேளாங்கண்ணி அல்லது காரைக்காலில் இருந்து தினசரி விரைவு ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரைக்கு தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இயக்க வேண்டும்.

வேளாங்கண்ணி அல்லது காரைக்காலில் இருந்து தினசரி பெங்களூர், யஸ்வந்த்பூர் அல்லது ஹூப்ளிக்கு இயக்க வேண்டும். இந்த ரயில் திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்பட வேண்டும். காலை 6 மணிக்கு மேல் தஞ்சைக்கு நாகையில் இருந்து ரயில்கள் இல்லை. எனவே நாகையில் இருந்து காலை 9 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் தஞ்சைக்கு ரயில் இயக்க வேண்டும். அதே போல் தஞ்சையில் இருந்து மதியம் காரைக்காலுக்கு ரயில்கள் இயக்க வேண்டும். காரைக்கால் முதல் பேரளம் வரை 23 கிலோ மீட்டர் வரையிலான அகல ரயில் பாதை பணியை தொடங்க வேண்டும். தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை மின்மயமாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : districts ,Velankanni ,Southern ,
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...