×

கோவை மாநகராட்சியில் 4 இடங்களில் உரம் தயாரிப்பு கூடங்கள் பணி முடிந்தது

கோவை, நவ.1:கோவை மாநகராட்சியில் 10 இடங்களில் ரூ.11 கோடியே 62 லட்சம் மதிப்பில் உரம் தயாரிப்பு கூடங்கள் அமைக்கும் பணிகளில் 4 இடங்களில்  உரம் தயாரிப்பு கூடங்கள் பணி நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள  குடியிருப்புப் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் 1,500க்கும்  மேற்பட்ட மாநகராட்சி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் ஒரு டன்  குப்பைகள் சேர்க்கப்பட்டு இரண்டு நாளைக்கு ஒருமுறை மாநகராட்சி ஊழியர்கள்  அவற்றை வாகனங்கள் மூலமாக வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு  செல்கின்றனர்.இந்த நிலையில், வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு  செல்ப்படும் குப்பையின் அளவை குறைக்க மாநகரில் 50 இடங்களில் உரம்  தயாரிக்கும் கூடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக 10  இடங்களில் தற்போது ரூ.11 கோடியே 62 லட்சம் மதிப்பில் உரம் தயாரிப்பு  கூடங்கள் அமைக்கப்பட்ட உள்ளன.

இதற்காக வீடுவீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத  குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் சேகரிக்க 102 டாட்டா ஏஸ் வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு  குப்பைத் தொட்டிகளில் மக்கள் குப்பைகளை கொட்டுவது தவிர்க்கப்படும் என்றும்,  குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டு அந்த இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு  பராமரிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘10 இடங்களில் உரம் தயாரிப்பு கூடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 4 இடங்களில் உரம் தயாரிக்கும் கூடங்கள் பணி நிறைவடைந்துள்ளன. விரைவில் சோதனை முறையில் இயக்கப்பட்டு பின்பு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது, ’’ என்றார்.



Tags : Composting plants ,locations ,Coimbatore Corporation ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு