×

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அருகே நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் விரைவில் திறப்பு: அறநிலையத்துறை தகவல்

சென்னை: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடத்தில், 84,592 ச.அடி பரப்பளவில் ₹20.10 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட  நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கட்டும் பணி அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.  இந்த மண்டபத்தின் தரைத்தளத்தில் 552 நபர்கள் உணவருந்தும் வகையில் இருக்கைகள், நவீன வசதிகளுடன் கூடிய  சமையலறை, முதல்தளத்தில் சுமார் 1,228 நபர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படுகிறது. பால்கனியில் சுமார் 160 அமரலாம். திருமண மண்டபத்தை பயன்படுத்துவோர் தங்குவதற்கு 12 அறைகளும், விருந்தினர் அறைகள்,  மணமகன், மணமகள் அறைகளும் அமைக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம், சூரியஒளியில் இயங்கும் (கொதிகலன்கள்) வாட்டர் ஹீட்டர்கள்-3, தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 250 கேவி ஜெனரேட்டர், 10 நபர்கள் செல்லக்கூடிய 2  மின்தூக்கிகள் ஆகியவை அமைக்கப்படுகிறது.  இந்த வளாகத்தில்  100 கார்கள் மற்றும் 100 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இதன் கட்டுமானப் பணியில் 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மண்டப  பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கமிஷனர் பணீந்திரரெட்டி நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, இந்த திருமண மண்டபம் விரைவில் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Tags : Marriage hall ,facilities ,temple ,Thiruvanmiyoor ,
× RELATED மக்களுடன் முதல்வர் முகாமில்...