திருப்போரூர், நவ.1: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய பொன்மார் ஊராட்சி சென்னையை ஒட்டிய வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதியாக உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளும், 20க்கும் மேற்பட்ட வீட்டு மனைப்பிரிவுகளும் இங்கு உருவாகி உள்ளன. இவற்றில் கட்டப்பட்டுள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களில் இருந்து ஊராட்சி பணியாளர்கள் மூலம் கழிவுகள், குப்பைகள் பெறப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் அரசு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக பொன்மார் ஊராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள், குப்பை அகற்றும் வாகனம் போன்றவை இல்லாததால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக குறைந்த அளவில் பணியாற்றும் பணியாளர்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை பெறும் திட்டத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை. இருப்பினும் பணியாளர்களால் வீடு, கடைகளில் இருந்து பெறப்படும் குப்பைகள் அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்படுகின்றன. இவற்றில் மாடுகள், நாய்கள், பன்றிகள் தங்களின் உணவுகளைத் தேடி இந்த குப்பைகளை கிளறி விடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து தெருவில் நடந்து செல்வோர் மீது விழுகிறது. இவற்றில் கொசு உற்பத்தியாகி அருகில் உள்ள குடியிருப்புகளில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்போது மக்கள் பிரதிநிதிகள் இன்றி அதிகாரிகளின் நேரடி நிர்வாகத்தின் கீழ் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பொன்மார் ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து. குப்பை அள்ளும் வாகனங்கள், துப்புரவு பணியாளர்கள் நியமனம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொன்மார் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.