செங்கல்பட்டு, நவ. 1: செங்கல்பட்டு-தாம்பரம் ரயில் மார்க்கத்தில் மீண்டும் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதின் காரணமாக ரயில்சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயில் வழித்தடத்தை மாற்றக்கூடிய பாயின்ட் கோளாறு காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லக்கூடிய மின்சார ரயில்கள் மற்றும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லக்கூடிய ரயில்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லக்கூடிய வைகை அதிவேக ரயில் பரனூர் ரயில்நிலையத்திற்கும், செங்கல்பட்டு ரயில்நிலையத்திற்கும் இடையில் கொளவாய் ஏரி அருகே நடுவழியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் சிலர் ரயிலை விட்டு இறங்கி பேருந்து மார்க்கமாக திருச்சி மற்றும் மதுரை செல்வதற்காக நடந்தே சென்றனர்.
கடந்த ஒரு மாதமாக செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை அடிக்கடி இது போன்ற தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக செல்வதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாகவும் சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் மூன்றாவது வழித்தட பணி நடைபெறுவதாலும் இதுபோன்ற ரயில்சேவை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. பின்பு ஒரு மணி நேரத்திற்கு பின்பு ரயில்வே பொறியாளர்கள் கோளாரை சரி செய்த பின் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இதனால் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.