திருவள்ளூர், நவ. 1: திருவள்ளூர் அடுத்த பாண்டூர் பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பகடிவதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பல் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பாலசுந்தரம் வரவேற்றார். இந்திரா கல்விக்குழும தலைவர் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் இந்திரா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சென்னை டென்டல் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினர் டாக்டர் சாய்நாத் கலந்துகொண்டு பகடிவதையின் விளைவுகள், அதற்கான விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ பேசுகையில், ‘‘சுயமதிப்பை இழக்க செய்யும் பகடிவதை இந்த வளாகத்தில் அனுமதிக்க இயலாது. நல்ல மருத்துவருக்கு தொழில் திறமையோடு மனிதநேயமும் அவசியம். அதை வளர்த்துக்கொள்ள பயிற்சிக்களம்தான் இந்த கல்லூரி பருவம்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர்கள் டாக்டர் வீரகுமார், டாக்டர் இந்திரா பிரியதர்ஷினி மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.