கடலூர், நவ. 1: கடலூர் மஞ்சக்குப்பம் பழைய ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு கட்டிடத்தின் போர்டிகோ பலத்த மழையால் இடிந்து விழுந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக அக்கட்டிடத்தில் தங்கியிருந்த அதிகாரிகள் உயிர் தப்பினர்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் பழைய ஆட்சியர் அலுவலகம் அருகே ஆபீசர்ஸ் கிளப் என்ற பெயரில் அரசு கட்டிடம் உள்ளது. வெளியூரில் இருந்து கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இந்த கட்டிடத்தில் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று இக்கட்டிடத்தின் போர்டிகோ இடிந்து விழுந்தது. அதிகாலை நேரத்தில் இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. காலை நேரத்தில் இடிந்து விழுந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இடிந்து விழுந்த கட்டிடத்தை கடலூர் வட்டாட்சியர் பாலமுருகன் நேரில் பார்வையிட்டார். இடிந்த போர்டிகோ பகுதி விரைவில் அகற்றப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார். போர்டிகோ இடிந்து விழுந்ததால் கட்டிடத்தில் தங்கியிருக்கும் பல அதிகாரிகள் தங்கள் அறையை காலி செய்து வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.