×

மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டம்

அறந்தாங்கி, நவ.1: ஆவுடையார்கோவில் அருகே மீமிசலில் மழைநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆவுடையார்கோவில் அருகே மீமிசலில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழை மற்றும் அடை மழை காரணமாக மீமிசல் போலீஸ் நிலையம் அருகில் உள்ள விஜய்நகர் பகுதியில் மழை நீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் வசிப்போர் வருவாய்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் தண்ணீரை வெளியேற்றும் பணி தாமதமாக நடந்து வருகிறது.

இதை கண்டித்து விஜய்நகர் பகுதி பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மீமிசலில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது மறியலில் ஈடுபட முயன்றவர்களுடன் மீமிசல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மழைநீரை வெளியேற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.


Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...