×

மழையில் நனைந்த உலர் தீவனங்களை கால்நடைகளுக்கு தரக்கூடாது கால்நடை மருத்துவர்கள் அறிவுரை

வேலூர், நவ.1: மழையில் நனைந்த உலர் தீவனங்களை கால்நடைகளுக்கு கட்டாயம் தரக்கூடாது என கால்நடை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: கால்நடைகளை சுற்றுப்புற தட்ப வெப்ப  நிலைக்கு ஏற்றவாறு பராமரித்தல் மிக முக்கியம். அதிலும் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம். மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு நச்சுயிரிகள், நுண்ணுயிரிகள்  மற்றும் ஒட்டுண்ணிகளால் பாதிப்பு ஏற்படும். தீவனத்தில் பூஞ்சான் தொற்று ஏற்படுவதால் செரிமான குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குடற்புழுக்களால் ரத்த சோகை ஏற்படலாம். தொழுவம் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால்  கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படலாம்.

சினை மாடுகள், கன்றுக்குட்டிகள், இளம் ஆட்டுக்குட்டிகள் மழைக் காலங்களில் அதிக பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனை தடுக்க மழையில் நனைய விடாமல் தொழுவத்தில் கட்ட வேண்டும். பண்ணையை சுற்றி மழை நீர் தேங்கி நிற்கக்  கூடாது. சப்பை நோய், தொண்டை அடைப்பான் போன்ற தொற்றுநோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசி போட வேண்டும். குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.  வைக்கோல், சோளத்தட்டு, காய்ந்த கடலைக் கொடி போன்றவற்றை மழையில் நனையாதவாறு சேமிக்க வேண்டும். நனைந்த உலர் தீவனங்களை கட்டாயம் கொடுக்க கூடாது. நல்ல சுத்தமான குடிதண்ணீரை தர வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் உற்பத்தி திறன் குறைவை தடுக்க தாது உப்பு கலவை மற்றும் தாது உப்பு கட்டிகளை தர வேண்டும். மழை பெய்யும் போது கால்நடைகளை திறந்த வெளியில் மற்றும் ஒற்றை மரத்தில் கட்டி வைக்ககூடாது.  தொழுவங்களில் மின்கசிவு ஏற்படாமல் பராமரிக்க வேண்டும். மின்சார கம்பங்களில் மாடுகளை கட்டக்கூடாது. இவ்வாறு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : Veterinarians ,
× RELATED கால்நடை மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்