திருச்சி, அக்.31: திருச்சி புத்தூர் கல்லங்காட்டை சேர்ந்தவர் சிங்கத்துரை (62). இவர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆபீசர்ஸ் காலனியில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் புத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன், பிரவீன்குமார், சந்தோஷ்குமார், பிரவின்சாந்த் ஆகிய 4 இளைஞர்கள் இளநீர் குடிப்பதுபோல வந்து வியாபாரி சிங்கத்துரையிடம் தகராறு செய்து அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வியாபாரி சிங்கத்துரை அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். திருச்சி தாராநல்லூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் கண்ணன்(50). இவர் தென்னூர் ஹைரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த ஒரு வாலிபர் கண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் கல்லாவில் இருந்து ரூ.500ஐ எடுத்துக்கொண்டு அங்கிருந்த பாட்டில்களை உடைத்துவிட்டு போய்விட்டார். இதுகுறித்து கண்ணன், தில்லைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வயலூர் ரோடு செண்பக நகரை சேர்ந்த காளி (எ) காளிதாஸ் (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுகை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் ராஜா(41), இவர் உறையூரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சேல்ஸ் மேனாக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் அங்கு மது குடிக்க வந்த திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சோமு (எ) சோமசுந்தரம் விற்பனையாளரிடம் இருந்து ரூ.1,500பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த உறையூர் போலீசார் சோமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.