×

வைகையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்புவனம், அக். 31: திருப்புவனம் பகுதி விவசாயிகளின் நலன் கருதி வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்புவனம் பகுதியில் சுமார் 8 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டு வந்தது. விரகனூர் மதகு அணையின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் மூலம் கிராமப்புற கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லை. இதனால் விவசாயப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல விவசாயிகள் நிலங்களை தரிசாக விட்டு விட்டனர். மோட்டார் பம்ப்செட் விவசாயிகள் மட்டுமே நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். கடந்தாண்டு மோட்டார் பம்ப் செட் விவசாயிகள் மட்டும் சுமார் 800 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்திருந்தனர்.இந்தாண்டு வடகிழக்கு பருவமழை உரிய காலத்தில் தொடங்கியதால் திருப்புவனம் பகுதியில் நெல் நடவு பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். தற்போது கண்மாய்களில் நெல் நாற்றங்கால் அமைக்க மட்டுமே போதிய நீர் இருப்பு உள்ளது. மழை காரணமாக கண்மாய் மற்றும் கால்வாய்களில் ஈரப்பதம் உள்ள நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டால் விரைவில் கண்மாய்களுக்கு தண்ணீர் வர வாய்ப்புண்டு. வைகை அணையில் தற்போது 64 அடி தண்ணீர் உள்ளது.

எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுததியுள்ளனர். விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இன்றி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விவசாயமே நடைபெறவில்லை. நீண்ட வருடங்கள் கழித்து பெய்த மழை காரணமாக விவசாய பணிகளை தொடங்கியுள்ளோம், கண்மாயில் நீர் இருப்பு இருந்தால் தைரியமாக விவசாயம் செய்யயலாம், வைகை அணையில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் பொதுப்பணித்துறைக்கு இதுவரை தண்ணீர் திறக்க வலியுறுத்தி கடிதங்கள் ஏதும் அனுப்பவில்லை. வைகை அணையில் 69 அடியை நெருங்கினால் மட்டுமே தண்ணீர் திறக்க இயலும்’ என்றனர்.

வேற்றுமையை களைந்து ஒற்றுமையாய் வாழ்வோம் பல்வேறு நகரங்கள், கிராமங்களை கொண்டு ஒரு நாடு கட்டமைக்கப்படுகிறது. இனம், மொழி, பழக்க வழக்கங்களின் அடிப்படையில் ஒரே நாடாக இருந்தாலும், பல்வேறு பிரிவுகளாய் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரம் கொள்கைரீதியாகவும், பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு, அனைத்து மக்களும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நாடு மேம்பாடு அடையும். அப்படி நாட்டுமக்களின் ஒற்றுமையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் தேசிய ஒற்றுமை தினம்.

எப்படி உருவானது :
பள்ளி பாடப்புத்தகத்தில் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று ஒருவரை குறிப்பிடுவோமே... அவர் யாரென்று சொல்ல முடியுமா? ம்ம்... அவரேதான். சர்தார் வல்லபாய் பட்டேல். இவரின் பிறந்த தினமான இன்று (அக்.31, 1975) நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
சர்தார் வல்லபாய் பட்டேலை பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைவோமா? குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம்,  கரம்சாத் கிராமத்தில் 1875, அக். 31ல் படேல் பிறந்தார் சர்தார் வல்லபாய்  படேல். வக்கீலாகும் ஆசையில் சொந்தமாக வேலை பார்த்து பணம் சேர்த்தார்.  பாரிஸ்டர் பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். வறுமை காரணமாக சக மாணவர்களிடம்  புத்தகங்களை கடன் வாங்கி படித்தார். இரண்டே ஆண்டுகளில் படிப்பை முடித்து  இந்தியா திரும்பினார். பின்னர் நம் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்.
1947 - 49க்கு இடைப்பட்ட காலத்தில் 550 சுதந்திர மன்னர் மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியாவை வலுவான நாடாக படேல் உருவாக்கினார். காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. இதையடுத்து ராணுவத்தை அனுப்பி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தார் படேல். இந்தியா பலமாக உருவாக காரணமாக இருந்ததால் இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என அனைவரால் பாராட்டப்பட்டார்.
மகாத்மா காந்தியின் உப்பு சத்யாகிரக போராட்டத்தில் இவரது பங்கு முக்கியமானது. இதனால் சிறை சென்றார். ஒத்துழையாமை இயக்கத்தின்படி, வெளிநாட்டு ஆடைகளை புறக்கணித்ததுடன் மகன், மகள் வைத்திருந்த வெளிநாட்டு ஆடைகளையும் தூக்கி எறிந்தார். 1931ல் கராச்சியில் நடந்த மாநாட்டில் காங்., கட்சி தலைவரானார். 1942, ஆக.9ல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். உடல்நலன் மோசமாக இருந்த போதும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
1946 காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில், மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நேருவுக்கு வழி விட்டு, வல்லபாய் படேல் ஒதுங்கினார். இதனால் பிரதமர் பதவி வாய்ப்பையும் இழக்க நேர்ந்தது.
படேலின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், பிரதமர் மோடியின் முயற்சியால், குஜராத்தின் சர்தார் சரோவர் அணை அருகே, உலகின் மிக உயரமான சிலை அமைத்து கவுரவித்துள்ளது. இதன் உயரம் 600 அடி. இதற்கு முன் சீனாவின் புத்தர் சிலை இருந்தது. இதன் உயரம் 420 அடி. இவரது பிறந்தநாளை போற்றும் வகையில், இந்திய அளவில் இன்று அனைத்து பள்ளிகளிலும் ‘தேசிய ஒற்றுமை தினம்’ கடைப்பிடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Vaigai ,
× RELATED சித்திரை திருவிழாவின் முக்கிய...