×

சிதைந்து கிடக்கும் சாலையால் தினம், தினம் நடக்குது விபத்து

தேவகோட்டை, அக்.31: தேவகோட்டையில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராம்நகரில் இருந்து ஒத்தக்கடை வரை சுமார் 4 கி.மீ தூரம் நேர் சாலையாக உள்ளது. ராம்நகர், செயின்மேரீஸ், யூனியன் ஆபீஸ், ஆண்டவர் செட், தியேட்டர் ஸ்டாப், பஸ்நிலையம், சிவன்கோயில் முக்கு, வட்டாணம் சாலை, ஒத்தக்கடை என பஸ் நிறுத்தும் இடங்கள் இருக்கிறது.இதற்குள் அரசு உதவி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதனால் இப்பகுதியில் காலை 8மணி முதல் இரவு 9மணி வரை எந்நேரமும் போக்குவரத்து அதிகம் இருக்கும்.இப்படிப்பட்ட முக்கிய சாலைகள் முற்றிலும் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் ஆண்டவர் செட் பகுதியில் அதிக விபத்துகளும் நடைபெற்று வருகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சைக்கிளில் செல்லும் மாணவ மாணவியர் மற்றும் முதியவர்கள் தேங்கிய தண்ணீரில் விழுந்து செல்கின்றனர். எனவே, உடனடியாக இச்சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து நல்லாசிரியர் சுப்பு என்ற சுப்பிரமணியன் கூறுகையில்,``தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலையால் மக்கள் அன்றாடம் கண்ணீர் வடிக்கின்றனர். இச்சாலைக்கு எப்போது விடிவுகாலம் வரும் என்று தெரியவில்லை’’ என்று வருத்தத்துடன் கூறினார்.

Tags : Accidents ,road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...