×

வெங்கமேடு மேம்பால இறக்கத்தில் சாலை விபத்தை தடுக்க அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் வாகனஓட்டிகள் வலியுறுத்தல்

கரூர், அக். 31: கரூர் வெங்கமேடு மேம்பால இறக்கத்தில் அடிக்கடி நிலவி வரும் சாலை விபத்தினை தடுக்க அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.கரூர் திண்டுக்கல் சாலையில் வெங்ககல்பட்டி அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கரூரில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருச்சி பைபாஸ் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் வழியாக சென்று வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து ஒன்றில் பைக்கில் சென்ற முதியவர் இறந்தார். இதன் காரணமாக, திருச்சி பகுதியில் இருந்து கரூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் கரூர் பகுதிக்கு எளிதாக செல்ல இடதுபுறம் உள்ள சர்வீஸ் சாலையின் வழியாக சென்று வந்தன. இந்நிலையில், இந்த விபத்தின் காரணமாக, சர்வீஸ் சாலை இணைப்பு மூடப்பட்டது.இதன் காரணமாக, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து கரூர், தாந்தோணிமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பைபாஸ் சாலையில் இருந்து இடதுபுறம் திரும்பி சர்வீஸ் சாலையின் வழியாக வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் ஏறி திரும்பவும் கரூர் நோக்கி செல்லும் நிலையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் போன்ற பகுதிகளுக்கு மேம்பாலத்தில் ஏறும் போது, திண்டுக்கல் பகுதியில் இருந்து மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் மற்றும் கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி மேம்பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் குறுக்கிடுவதால் இந்த சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.இரவு நேரங்களில் வாகன விபத்துக்கள் அதிகளவு நடைபெற்று வருகிறது. எனவே, மேம்பாலத்தின் நுழைவு வாயில் பகுதியில் அனைத்து வாகன ஓட்டிகளும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில், அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் அல்லது விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் நிலவும் குளறுபடிகளை சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,road accident ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...