அவிநாசி, அக். 31:பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் நேற்று உத்தரவிட்டனர். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்துமதி, நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி பகுதிகள், தனியார் நிலங்களில் பயன்பாடில்லாத நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும். மேலும், ஆழ்துளை கிணறுகளை மூட தனியாருக்கு எச்சரிக்கை கடிதம் உடனடியாக அனுப்ப வேண்டும்.
இது குறித்து விழிப்புணார்வு ஏற்படுத்தும் விதமாக வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பெருமாநல்லூர் மகேஷ், கணக்கம்பாளையம் செந்தில், பொங்குபாளையம் தமிழரசன், மேற்குபதி கணேஷ், ஈட்டிவீரம்பாளையம் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.