×

ராஜகோபால் பூங்கா அருகே பாதாள சாக்கடை குழாய் உடைப்பு தொற்று நோய் பரவும் அபாயம்

தர்மபுரி, அக்.31: ராஜகோபால்பூங்கா அருகே பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் செல்வதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் அருகே ராஜகோபால் பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் அருகே சித்தவீரப்ப செட்டி தெருவில் பழக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. பூங்காவின் அருகே நகராட்சியின் கட்டண கழிப்பறை கட்டிடமும் உள்ளது. இந்த கழிப்பறை கட்டிடத்தின் முன் செல்லும் சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழி தோண்டப்பட்டுள்ளது.

இந்த பாதாள சாக்கடை கால்வாய் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் ஆறாக செல்கிறது. இதனால் இப்பகுதியில் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ராஜகோபால் பூங்கா அருகே பாதாள சாக்கடை கால்வாயின் பிரதான குழாயில், 4 நாட்களுக்கு முன்  உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனே இதை சீர் செய்ய வேண்டும்,’ என்றனர்.

Tags : sewer pipe ,Rajagopal Park ,
× RELATED பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் தேங்கும் கழிவுநீர்